தமிழக அரசியல்

“மீ டூ” விற்கு போட்டியாக “வீ டூ ” ஆண்கள் இயக்கம்?

Share

பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக ” வீ டூ ” என்ற இயக்கம்  சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பாக பத்திரிகையாளர் வாராகி கூறுகையில் இது வரை ஐம்பதாயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என்றார்.

சேர்ந்து பழகி விட்டு மனக்கசப்பு ஏற்பட்டதும் பாலியல் புகார் கொடுப்பது என்றும் சில பெண்கள் பணம் பறிக்கும் நோக்கிலும் செயல்படுகின்றனர்.

இதில் ஆண்களுக்கு என்ன பாதுகாப்பு  இருக்கிறது?

வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது என்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை என்ற  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இது போன்ற புகார்களை விசாரிக்க என்று தனி வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பது உண்மைதான். அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

இந்த சந்தேகம் வலுவடைய சின்மயிதான் காரணம்.

2013 ல் ஒரு முகநூல் பக்கத்தில் தன்னை தொந்தரவு செய்ததாக கூறி ஒரு பேராசிரியர் அரசு ஊழியர் மற்றும் சில நபர்கள் மீது புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய வைத்த சின்மயி எப்படி பலவீனமானவர் ஆவார்? அந்த வழக்கு என்னவாயிற்று? ஏன் கிடப்பில் போட்டார்கள்? இதையும் பத்திரிகைகள் விசாரித்து எழுத வேண்டும்.

அதுவும் மேல்சாதி பெண்கள் புகார் கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். அவர்கள் பலவீனமானவர்கள் அல்லவே அல்ல. ஏனெனில் அவர்களுக்கு சமுதாய பலம் உண்டு. எதையும் சமாளிக்க ஆலோசனைகள் சொல்ல ஆட்கள் உண்டு.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மேல்சாதி மக்கள் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதை உணர்ந்தார்களா இல்லையா? அப்போதுதான் சின்மயி புகார் கொடுத்திருக்கிறார்.  இப்போது  கொடுப்பது பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதாலா? இங்கே அடிமை ஆட்சி இருப்பதாலா?

பெண்களில் பாதிப்புக்கு உள்ளாகும்போது மேல்சாதி கீழ்சாதி என்றெல்லாம் யாரும்  பார்ப்பது இல்லை. ஆனால்  கீழ் சாதி பெண்கள் பாதிக்கு உள்ளாகும்போது இப்படித்தான் எல்லாரும் சேர்ந்து குரல் கொடுக்கிறார்களா? ஏன் கொடுப்பதில்லை.

மேல்நாட்டு நாகரிகம் பற்றி பேசுகிறார்கள். அங்கு இருக்கும் விழிப்புணர்வு  இங்கு இருக்கிறதா?

இங்கு ஒரு கூட்டம் மதத்தை காட்டி மூட நம்பிக்கைகளில் ஆழ்த்தி ஒரு பெரும் சமூக கூட்டத்தையே அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதே அது அங்கே முடியுமா? சாதி அவலங்கள் அங்கே உண்டா? கல்வியை நாங்களே கொள்ளையடித்து வாழ்வோம் என்று அங்கே இருக்கிறதா?

மும்பையில் சச்சின் மிட்காரி என்ற திருமணமான வாலிபரை ஒரு பெண் பாலியல்  உறவுக்கு துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  கொடுமை என்னவென்றால் சம்மதிக்க மறுத்தால் அவர் மீது பொய் புகார் கொடுப்பதாக ப்ளாக் மெயில் செய்து இருக்கிறார். இப்படியும் நடக்கிறதே?

இப்படியும் ஒரு இயக்கம் இருக்கட்டுமே?

This website uses cookies.