சசிகலாவை விடுவிக்க தீர்மானம் போடுமா சட்ட மன்றம் ?

சசிகலாவை விடுவிக்க தீர்மானம் போடுமா சட்ட மன்றம் ?

ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் திறக்க பாரத பிரதமரின் தேதியை கேட்டிருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி .

ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் சசிகலாவுடன் பரப்பன அக்ரகார சிறையில் கைதியாக இருந்திருப்பார்.

ஜெயலலிதாவுக்கு நூறு கோடி அபராதம்.   மற்றவர்களுக்கு பத்து கோடிதான் அபராதம்.

ஜெயலலிதாவின் பினாமிகளாக செயல்பட்டார்கள் என்பதுதான் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு.   எனவே பிரதான குற்றவாளி ஜெயலலிதாதான்.

சட்ட மன்றத்தில் படம் திறப்பது என்பது வெறும் சடங்கல்ல.    அது ஒரு தொண்டிற்கான அங்கீகாரம்.!   வாழ்த்து .!

யாரை சட்டமன்றம் வாழ்த்துகிறது.    உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டவரையா?       அதற்கு சட்ட மன்றத்திற்கு உரிமை இருக்கிறதா?

உச்சநீதி மன்றத்தால் குற்றவாளி என்று  தீர்ப்பளிக்கப்  பட்டவருக்கு மரியாதை செய்ய சட்ட மன்றத்திற்கு உரிமை உள்ளதா?

இதனால் உச்ச நீதி மன்ற தீர்ப்பு செல்லாதது என்று ஆகி விடாதா?    அல்லது யாரும் இறந்து விட்டதால் அவர்களின் குற்றங்கள் மன்னிக்கப் பட்டுவிட்டன என்று சட்டம் சொல்கிறதா?

Abatement என்ற சொல்லிற்கு அற்றுப் போய் விட்டது என்று பொருள் கொள்ளலாம்.   அதாவது தண்டனை  அனுபவிக்க முடியாத இடத்திற்கு சென்று விட்டதால் தண்டனை  அற்றுப் போய் விட்டது.    குற்றம் அற்றுப் போய்விட வில்லை.   நிரபராதி என்று ஆகிவிட வில்லை.   அவருடன் குற்றம் சுமத்தப் பட்டவர்  சிறையில்தான் காலம் கழிக்கிறார்.

இன்று ஜெயலலிதாவை போற்றினால் நாளை என்னுடன் தண்டனை பெற்றவரை சிறப்புச் செய்கிறீர்களே என்னையும் விடுவியுங்கள் என்று சசிகலா கேட்டால் சட்ட மன்றம் தீர்மானம் இயற்றி விடுமா?

பல ஆட்சேபணை களுக்குப் பின்னும் ஜெயலலிதா படம் இன்னும் அரசு அலுவலகங்களில் தொங்கி கொண்டிருப்பதுவே சட்ட விரோதம்.    அவமானம்.    உச்ச நீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம்.

முன் உதாரணம் ஏதாவது உண்டா?     அரசியல் காரணங் களுக்காக சிறை சென்றவர்கள் வேறு வகை.     குற்றங்கள் செய்து விட்டு உச்சநீதி  மன்றத்தால் தண்டனை உறுதி செய்யப் பட்டவர்கள் யாராவது சட்ட மன்றத்தால் போற்றப் பட்டிருக்கிறார்களா ?

சசிகலா சிறையில் இருக்கும்வரை ஜெயலலிதா வை பாராட்டி எந்த காரியத்தையும் ஒரு அரசு செய்ய முடியாது.

ஜெயலலிதாவின் கட்சியில் அவரை தலைவராக கொண்டாடுவதோ பாராட்டுவதோ அவர்களின் தனி உரிமை.

ஆனால் ஒரு அரசு உறுதி செய்யப் பட்ட குற்றவாளியை கவுரவப் படுத்தக் கூடாது.   அது ஒரு தேசிய அவமானம்.  அடிமைகளின் ராஜ்யத்தில் தான் இப்படி எல்லாம் நடக்கும்.