மதம்

அத்திவரதர் பக்தர் கூட்டம் காட்டும் உண்மைகள்?!

Share

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியும் அத்திவரதரும் வேறு வேறு சுவாமிகள் அல்ல.

ஒருவர் எப்போதும் இருப்பவர். அத்தியில் ஆனவர் நாற்பது ஆண்டுகள் குளத்தில் வைக்கப்பட்டு பக்தர்களால் வெளியே எடுக்கப்பட்டு தரிசிக்கபடுபவர்.

                     எப்போதும் இருப்பவரை காண கூட்டம் கூடுவதில்லை. ஆனால் அவரே நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வருகிறார் என்றால், அவரை பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் திரள் கூட்டப் படுகிறது. கூடுகிறார்கள். 

பத்திரிகைகள் பக்கம் பக்கமாக புராணக் கதைகளை எழுதி நிரப்பி விற்கிறார்கள் .    படிப்பவர்கள் பரவசமாகி கூட்டத்தில் கலக்க போகிறார்கள்.

செல்பவர்களை யாராவது புராணக் கதையை பற்றி தெரியுமா அதை நம்புகிறீர்களா என்று கேட்டு யாரும் பிரசுரிப்பதில்லை.

எல்லாரும் செல்கிறார்கள். நானும் செல்கிறேன். இதுதானே மனநிலை. அதில் அவர்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைத்தால் எல்லார்க்கும் நல்லதே.

குடியரசுத் தலைவர் துணை குடியரசுத் தலைவர், என்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை வரச் செய்ய அவர்களால் முடிகிறது. அந்த நெட்வொர்க் அவர்களிடம் இருக்கிறது. அந்த விளம்பரத்தில் பாமரன் மூழ்கி விடுகிறான்.

விவிஐபி அந்தஸ்தில் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் பாதுகாப்போடு அத்திவரதரை தரிசிக்க முடிகிறது. மாவட்ட ஆட்சியர் கையெழுத்தை போலியாக போட்டு டோனர் பாஸ் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.

சிலர் ஆயிரக்கணக்கில் மோசடி செய்து தரிசனம் செய்ய வைக்கின்றனர்.

இதில்  ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியல் மற்றும் அளவை இந்து அறநிலையத்துறை வெளியிடுமா?

எவருடைய  நம்பிக்கையையும் விமர்சிப்பதோ குறை சொல்வதோ நமது நோக்கமல்ல. ஆனால் நடைமுறையில் பக்தி தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

எங்கும் இருக்கும் இறைவன் எல்லா பிம்பங்களிலும் இருப்பான்தானே !!!

அந்த உண்மையை பிரச்சாரம் செய்வது நமது கடமை அல்லவா!!

This website uses cookies.