சேர நாடு கேரளாவில் உருவான எம்ஜிஆர் நினைவகம்!!!

சேர நாடு கேரளாவில் உருவான எம்ஜிஆர் நினைவகம்!!!

கேரளாவை நாம்தான் சேர நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அதை உணர்ந்ததாக தெரியவில்லை.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் இல்லை. அதற்கு முன்பு அவர்கள் தமிழ் தானே பேசிக்கொண்டிருந்திருக்க முடியும்.

பெரியார், தெருவில் அனைவரும் நடக்கும்  உரிமையை பெற வைக்கம் சென்றுதான் போராடினார். கர்நாடகாவுக்கோ ஆந்திராவுக்கோ செல்லவில்லை.

எம்ஜிஆர் தன்னை கோவை மன்றாடியார் என்று சொன்னார்.

தற்போது அவரது பூர்விகம் தொடர்பாக ஒரு முற்றுபுள்ளி. கேரளாவின் சித்தூர் தாலுகா வடவன்னுர் கிராம பஞ்சாயத்தில் அவரது பூர்விக வீடான சத்யா விலாசத்தில் சைதை துரைசாமியால் ஒரு நினைவகம் அமைக்கப்  பட்டிருக்கிறது.

மேலக்காத் கோபால மேனன் -வடவன்னுர் சத்யபாமாவின் இரண்டாவது மகன் எம் ஜி யார். கண்டியில் பிறந்து வடவன்னுரில் வளர்ந்து சென்னையில் நடிகராகி   திமுகவில் இணைந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆருக்கு நாட்டை ஆளும் வாய்ப்பை தமிழகம் தந்தது .

எந்த தலைவருக்கும் கிடைக்காத அன்பையும் ஆதரவையும் அவருக்கு தமிழகம் தந்தது. பொன்மனச் செம்மலாக போற்றப்பட்டார். தான் சம்பாதித்த எதையும் எங்கும் கொண்டு செல்லாமல் இங்கேயே விட்டுச் சென்றார்.

அதனால்தான் அவருக்கு ஊருக்கு  ஊர் சிலைகளையும் நினைவுச் சின்னங்களையும் வைத்து கொண்டாடுகிறது தமிழகம்.

அவர் செய்த ஒரே தவறு ஜெயலலிதாவை அடையாளம் காட்டியதுதான் என்பது பலரது கருத்து. அதிமுகவினர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அது அவர்களது உரிமை.

அவரது நினைவகத்தை பார்க்கும் மலையாளிகள் தாங்கள் சேர நாட்டினர் என்பதால் தானே தமிழர்கள் எம்ஜியாரை தலைவராக ஏற்றுக் கொண்டார்கள் என்ற உணர்வு வந்தால் அதுவே எம்ஜிஆருக்கு  அவர்கள் செலுத்தும் மரியாதை.