கல்வி

பாடத்திட்டத்தில் நாடார் சமூக இழிவை நீக்காத பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ராஜினாமா செய்வார்களா?!

Share

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயம் பற்றிய  சர்ச்சைக்குரிய பாடத்தை பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தடை செய்து விட்டதாகவும் எனவே அது குறித்த போராட்டம் தேவையில்லை எனவும் டாக்டர் தமிழிசை சொல்கிறார்.

ஆனால் இன்று நாடார் சமுதாயம் பற்றிய பாடத்தை நீக்க வேண்டும் என்று கோரி  நாடார் சமுதாயம்  போராட்டம் நடத்துகிறது. அதில் எல்லாக் கட்சித் தலைவர்களும் பேசுகிறார்கள். உண்மை என்ன என்பதை நாடார் சமுதாய மக்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏன் என்றால்  போராட்டம் நடத்தியவர்களும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் மத்திய அரசுக்கு  எதிராக இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். அரசியல் ரீதியாகவோ வேறு வகையிலோ ஆதாயம் அடையும் நோக்கில் இந்த போராட்டம் நடக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி தான் சொல்லி அதை செய்யவில்லை என்பதுதான் பிரச்சினையின்  அடித்தளம்.

question-paper-in-tamil

அதை ஒப்புக் கொள்கிற மனோநிலை வேண்டுமானால் தமிழிசைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகத்திற்கு உண்மை தெரிய வேண்டும். அடுத்த ஆண்டு புதிதாக தயாரிக்கப்படும்  புத்தகத்தில் நாடார் சமுதாயத்தினர் ஆடை உடுத்தல் குறித்த பாடம் நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரை வருகிற 11-ஆம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளதாக தமிழிசை சொல்லுகிறார். அப்படியானால் இதுவரை சர்ச்சைக்குரிய பாடம் நீக்கப்படாமல் தானே இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் சமுதாயத்தினர் தோள் சேலை அணிவதற்கு தடை இருந்தது. அதை ரத்து செய்வதற்கு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருந்தது. சமுதாயத்தில் இருந்த அந்த அவலம் தற்கால சமுதாயத்திற்கு தெரியக்கூடாது என்று நினைக்கிறார்களா? எது எப்படி இருந்தாலும் உண்மை வரலாறை மறைக்காமல் திரிக்காமல் எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்தாமல்  தெளிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகம் அமைய வேண்டும். அல்லது சர்ச்சை இருந்தால் அது நீக்கப்பட வேண்டும்.

2012-ம் ஆண்டு முதல் இந்த பிரச்னை இருந்து வருகிறது. நாடார்களை குடியேறிவர்கள் என்று தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கீழ் சாதி என்று சிலரை ஒதுக்கி வைத்து கேவலப்படுத்திய செயலை இந்திய நாட்டில் எந்த மாநிலத்திலும் கேரளாவைப்போல் செய்ததில்லை. குறிப்பிட்ட சாதிப் பெண்கள் திறந்த மார்போடு தான் இருக்க வேண்டும், மீறி அணிந்தால் அதற்கு மார்புப் பகுதியின் அளவுக்கேற்ப வரி கட்ட வேண்டும் என்று எந்த மாநிலத்திலும் சட்டம் இருந்ததில்லை. கிறிஸ்தவராக மாறினால் அவர்கள் மட்டும் குப்பாயம் என்ற மேலாடை அணியலாம் என்று விதித்ததால் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.  இதெல்லாம் வரலாறுகள். அதனால் தான் சுவாமி  விவேகானந்தர் இத்தகைய சட்டத்தை வைத்திருந்த கேரளாவை இந்தியாவின் பைத்தியக்கார விடுதி என்றார்.

எது எப்படியோ இன்று பொன்ராதாகிருஷ்ணனும் தமிழிசை சவுந்தரராஜனும் பாஜக வில் மத்திய அமைச்சராகவும் மாநில தலைவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தங்கள் சமூக இழிவை தங்கள் கட்சி  ஆட்சியில் இருக்கும்போது அகற்ற முடியாதவர்கள் வேறு என்ன சாதிக்க முடியும்.?

ஒன்று பாடப்புத்தகத்தில் இருந்து சமூக இழிவை நீக்கட்டும். அல்லது பொறுப்புகளை ராஜினாமா செய்யட்டும். செய்வார்களா?

This website uses cookies.