திருப்பதியில் பக்தர்கள் மொட்டை போட எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறதாம். இதில் 350 நாவிதர் வேலையிடங்கள் காலியாக இருக்கிறதாம். அதிலும் கணிசமான பேரை தற்காலிக பணியில் வைத்திருக்கிறார்கள்.
எங்கே போய் அழுவது? முடிக்காணிக்கை கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித் தருகிறது.
அந்த வருவாயிலேயே தேவையான ஆண் -பெண் நாவிதர்களை நியமிப்பதில் நிர்வாகத்துக்கு என்ன பிரச்சினை. ?
இதைவிட கொடுமை தரும தரிசனத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வைக்கும் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு.
பலவகை பக்தர்கள் திருப்பதிக்கு வருகிறார்கள். . பல மொழி பேசுபவர்கள், .கோடீஸ்வரர்கள் , பஞ்சை பராரிகள், மத்திய தர வர்க்கம், அரசியல்வாதிகள் என்று பல தரப்பினர்.
Rs. 300, 500, 1500 , 3000, 5000 என்று பல தரப்பட்ட காணிக்கை சக்தி படைத்த பக்தர்கள். இவர்கள் நினைத்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் பேறு படைத்தவர்கள். . எந்த ஏற்றத் தாழ்வையும் எந்த இந்துவும் கேள்வியே கேட்க மாட்டான். ஏனென்றால் ஏற்றத் தாழ்வுகள் இறைவனால் உண்டாக்கப்பட்டவை என்பது அவனுக்கு போதிக்கப் பட்டு நம்பிக் கொண்டிருக்கிறான். அது வாழ்க்கையில்தானே , இறைவன் சன்னதியில் ஏன் என்று அவன் கேட்கவே மாட்டான்.
பக்தர்கள் என்றாலே எல்லாருக்குமே ஒரு அலட்சியம். அவர்கள் காத்திருக்க தயாராக இருக்கிறார்கள்.! எதையும் ஏன் எதற்கு என்று கேட்கவே மாட்டார்கள்! இதுவரை நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்ட பக்தன் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா?
தேவஸ்தான போர்டு நிர்வாகிகள் அரசியல் கட்சிகளால் நிரப்பப் படுகின்றன. எல்லா அரசியலும் இதிலும் இருக்கத்தான் செய்கிறது.
தேவஸ்தானமாக பார்த்து பாவம் பக்தர்கள் என்று கருணை காட்டினால்தான் உண்டு. ஒரு நாளைக்கு 50,000 – 1,00,000 பக்தர்கள் தான் தரிசிக்க முடியும் என்றால் ஏன் மற்றவர்களை இரண்டு மூன்று நாள் காக்க வைக்கிறீர்கள். ?
இடையில் தரிசன நாள் குறித்து கையில் கிழிக்க முடியாத பட்டை ஒட்டினார்கள். குறிப்பிட்ட நாள் போனால் போதும் என்று. இப்போது அதையும் மாற்றி விட்டார்களாம்.
நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்காக பக்தர்களை மந்தைகளாக பாவித்து நடத்த வேண்டுமா?
அடித்துப் பிடித்துக் கொண்டு முட்டி மோதிக் கொண்டு பிறரை துன்புறுத்தி தானும் துன்புற்று , இறைவனை ஒரு சில கணங்கள் தரிசிக்கும்போது ,மிகச் சக்தியுள்ள அந்த இறைவன் , உங்கள் செய்கைகளை அங்கீகரிப்பான் என்றா எண்ணுகிறீர்கள்?
நீதி என்ன? பக்தன் சரியாக சுய கட்டுப் பாடுடன் நடந்து கொண்டு நிதானமாக தரிசிப்பது என்று முடிவெடுத்து நடந்து கொண்டால் , சுவாமி ஒருபோதும் கோபித்துக் கொள்ள மாட்டார்.
கட்டணம் கொடுத்து சுவாமியிடம் சிறப்பு தரிசனம் பெரும் பக்தனுக்கு சுவாமி சிறப்பு வரங்கள் கொடுத்தால் அவர் சுவாமியாக இருக்க முடியுமா?
சரி. இப்போதாவது நிர்வாகம் விழித்துக் கொண்டு மொட்டை போடும் நாவிதர்களை தேவையான எண்ணிக்கையில் நிரந்தர ஊழியர்களாக நியமிக்க உடனே முன்வரட்டும்..
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)