சிறீ சேனா- தேவதையா ? மற்றுமொரு பிசாசா ?

Share
ராஜ பக்சே ஒருவழியாக தோற்கடிக்கப் பட்டு விட்டார்.  யாரால்?
மற்றுமொரு சிங்கள ஆதிக்க பிரதிநிதி மைத்ரி பால ஸ்ரீசெனாவால்.. இதில் தமிழர்கள் மகிழ என்ன இருக்கிறது?
தேர்தலின்போதே தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவேன் என்று மறந்து கூட வாக்குறுதி கொடுக்க வில்லை சிறீசேன.
போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நா.குழுவிற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்குமா?
தமிழர்கள் சம உரிமையுடன் தன்மானத்துடன் வாழ சிங்கள அரசு வழி வகுக்குமா?    மொத்தத்தில் மனிதம் மதிக்கப் படுமா?
இதுவரையில் அறவழிப் போராட்டங்கள் கூட அனுமதிக்கப் படாத நிலையில் , ராணுவத்தை தமிழர்கள் மத்தியில் குவித்து வைத்துக் கொண்டு அச்சுறுத்தி ஆண்டு கொண்டு இருக்கும் நிலையில் மாற்றம் இருக்குமா?
மேதகு பிரபாகரன் ஆயுதம் தூக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதை இப்படி விளக்குவார் , ” சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் இரண்டாக பிரிந்து  நடத்தும் அரசியலில் , ஒருவர் ஆட்சிக்கு வந்து ஆதிக்கம் செலுத்துவதும் மற்றவர் ஆதரிப்பார் என்று நம்பி தமிழர்கள் அவர்கள் பின் சென்று  ஏமாறுவதும் அவர்கள் நடத்தும் நாடகத்தின் பல அங்கங்களை நாம் பார்த்து சலித்து விட்டோம். இனி அவர்களோடு ஒன்றாக  மானத்துடன் வாழ்வது என்பது நடக்கவே நடக்காது. “
தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று ஒழிக்கப் பட்டபோது  எந்த சிங்கள சக்தியும் கண்டித்து குரல் கொடுக்க வில்லை.
இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவும் தமிழர்களுக்கு சம உரிமை வாங்கி கொடுக்கப் போவதில்லை.
சர்வதேச ஒத்துழைப்புடன்  கூடிய
மற்றுமொரு நீண்ட நெடிய அறவழிப் போராட்டத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்.
மற்றபடி அரக்கனாக அடையாளம் காணப்பட்ட ராஜபக்சே  அதிகாரம் இழந்தான் என்ற செய்தி வரவேற்கப் பட வேண்டிய ஒன்றுதான். .
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


This website uses cookies.